கோரக்கர் தோற்றம்
பதினெண் சித்தர்களில் ஒருவர் கோரக்கர் சித்தர். சித்தர்கள் பலரும் சிவாலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களில் ஜீவ சமாதி பெற்றிருக்க, இவர் மட்டும் சிவாலயத்தின் வெளியே வலதுபுறம் ஞானச்சுடராய் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார். கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும் ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து 9 வயது பாலனாக கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாத, பஞ்சபூதங்களாலும் பாதிக்கப்படாத வஜ்ர காயம் பெற்றவர் என்கிறது தல புராணம். இவர் சீனாவில் 500 வருடங்கள் சித்து விளையாடியதாகவும், பொதிகையில் 400 வருடங்கள் தங்கிய பின் பழனி வந்ததாகவும் அவரது நூலில் குறிப்பிடப்படுகிறது.


